கீவ்: ரஷ்யாவில் கூடுதல் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி எச்சரித்த மறுநாள், அவர் பிறந்த ‘கிரிவி ரிஹ்’ நகரில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இரண்டு ரஷ்ய ஏவுகணைகள் அந்த நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடத்தையும் பல்கலைக்கழக வளாகத்தையும் மோதியதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் குறைந்தது அறுவர் மாண்டதாகவும் 75 பேர் காயமடைந்ததாகவும் அவ்வட்டார ராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹீ லிசாக் கூறினார்.
இருபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர் டெலிகிராம் செய்தி ஒன்றில் குறிப்பிட்டார்.
மாண்டோரில் பத்து வயதுச் சிறுமியும் அவளது தாயாரும் அடங்குவர்.
ரஷ்யாவில் உக்ரேன் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டதை அடுத்து, உக்ரேனியத் தலைவரின் எச்சரிக்கை வந்தது. ரஷ்யர்களுக்கு எதிராகப் போரிடுவதற்கான முயற்சிகளை உக்ரேன் வலுப்படுத்துவதை அது காட்டுவதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடந்த சற்று நேரத்தில், திரு ஸெலென்ஸ்கி சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டார். அதில் சேதமடைந்த கட்டடம் ஒன்றிலிருந்து புகை வெளியாவதைக் காணமுடிந்தது.
இந்நிலையில், ரஷ்யப் படைகள் நியாயமற்ற போரைத் தொடுக்கும்வரை, மாஸ்கோவிலும் ரஷ்யா முழுவதிலும் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம் என்று உக்ரேனின் ராணுவ வேவு அமைப்பு கூறியுள்ளது.

