வாஷிங்டன்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் சனிக்கிழமை (டிசம்பர் 20) ரஷ்ய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரஷ்யாவின் சிறப்புத் தூதர் கிரில் டிமிட்ரிவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டார். அதேபோல் அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃபும், அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மருமகன் ஜெரேட் குஷ்னரும் பேச்சுவார்த்தை நடத்திய குழுவில் இருந்தனர்.
இருதரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் இருந்ததால் ஞாயிற்றுக்கிழமையும் அது தொடரும் என்று வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.
தீர்வுகள் எட்டப்படக்கூடிய சூழ்நிலை இருந்தால் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோவும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது.
ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஃபுளோரிடாவில் நடந்த சந்திப்புக்கு முன்னர் அமெரிக்கா டிசம்பர் 19 (வெள்ளிக்கிழமை) உக்ரேன் மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தியது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரேன்மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் அது முழுப்போராக மாறியது. இதனால் இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மாண்டனர்.

