இனி சவூதி அரேபியா சென்று வேலைசெய்ய விரும்பும் இந்தியர்கள் அந்நாட்டின் புதிய திறன் தகுதித் தேர்வில் கட்டாயத் தேர்ச்சி பெறவேண்டியது அவசியம்.
நிபுணத்துவ வேலைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் அந்தத் தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ‘தி எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி தெரிவிக்கிறது.
இப்போதைக்குக் குறிப்பிட்ட சில வேலைகளுக்கு மட்டும் ‘எஸ்விபி’ எனப்படும் இந்தத் தகுதித் தேர்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காலப்போக்கில் மற்ற வேலைகளுக்கும் அத்தேர்வு விரிவுபடுத்தப்படும்.
குழாய் வேலை செய்வோர் (plumbers and pipe fitters), பற்ற வைப்போர் (welders), மின்தொழிலர்கள் (electricians) உள்ளிட்ட 19 வேலைகளுக்கு இப்போதைக்கு ‘எஸ்விபி’ தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை ஏற்கெனவே அங்கு வேலைசெய்வோருக்கும் இனி வேலை செய்ய திட்டமிட்டுள்ளோருக்கும் பொருந்தும். எழுத்து, செயல்முறைத் தேர்வு என இரண்டிலும் பங்கேற்க வேண்டும்.
இந்தத் தகுதித் தேர்வு குறித்து ஆட்சேர்ப்பு நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று இந்தியாவிலுள்ள சவூதி அரேபியத் தூதரகம் தெரிவித்துள்ளது.