பினாங்கு: மலேசியாவில் நிகழ்த்தப்பட்ட இணைய முதலீட்டு மோசடி மூலம் உலக அளவில் பாதிக்கப்பட்டோர் 100 பில்லியன் ரிங்கிட் அதாவது 25 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை இழந்துள்ளனர்.
மூவாண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்ற அந்த இணைய மோசடி மக்களின் நம்பிக்கையை மிகவும் தந்திரமாகத் தக்கவைத்தது.
நம்பிக்கையைத் தக்கவைத்து ஏமாற்றிய இணைய மோசடி
இணையத்தில் முதலீடு செய்த தொகை படிப்படியாக அதிகரித்ததுடன் முதலீடு செய்த பணத்தையும் சுமுகமாகத் திரும்பப் பெற முடிந்தது. அத்துடன் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை 5 விழுக்காடு வரையிலான லாபத்தை வாடிக்கையாளர்கள் பெற்றனர்.
முதலீடு செய்த பணத்துக்கு முன்கூட்டியே வந்த லாபத்தைக் கண்டு பலர் தங்கள் சேமிப்புகளை இணைய முதலீட்டில் வாரி இறைத்தனர்.
திடீரென போட்ட பணம் எல்லாம் ஒரே இரவில் காணாமற்போனபோது நூற்றுக்கணக்கானோர் திக்குமுக்காடினர்.
இழந்த பணத்துக்கு நீதிக் கேட்டு 300க்கும் அதிகமான வெளிநாட்டினர் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) மலேசியாவை நோக்கி படையெடுத்தனர்.
அத்தனை பேரையும் ஏமாற்றிய இணைய மோசடியை பினாங்கைச் சேர்ந்த மலேசியர் ஒருவர் செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலோர் சிறு தொழில்களை நடத்துவோர் அல்லது சம்பளத்துக்கு வேலைசெய்யும் ஊழியர்கள். அவர்களில் அதிகமானோர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
ஒருசிலர் தைவான், தென்கொரியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
2018ஆம் ஆண்டு செயல்படத் தொடங்கிய மிகப் பிரபலமான இணையத்தளம் மூலம் முதலீடு குறித்து பாதிக்கப்பட்டோர் அறிய வந்தனர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு பலர் அந்தத் தளத்தில் தொடர்ந்து முதலீடு செய்தனர். முதலீடு செய்த தொகைக்கு ஈடாக ஒவ்வொரு மாதமும் 5 விழுக்காடுவரை லாபம் கிடைக்கும் என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
தொடக்கத்தில் அனைத்தும் சுமுகமாகத்தான் சென்றது. பலரால் லாபத்தை முதலீட்டிலிருந்து எடுக்க முடிந்தது. 2021ஆம் ஆண்டிலிருந்து அந்தப் பிம்பம் உடையத் தொடங்கியது.
அவ்வப்போது இடையூறுகளை எதிர்கொண்ட தளம் ஒரு நாள் முழுமையாகச் செயல்படாமல் போனது.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 970,000 கணக்குகள் இணையத்தளத்தில் இருந்தன.

