மனிலா: பிலிப்பீன்சை ஆக அண்மையில் உலுக்கிய வலுவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கடற்படுகைகள், இரண்டு மீட்டர் அளவுக்கு உயர்ந்துள்ளதாக அந்நாட்டுச் சுற்றுச்சூழல் துறை சனிக்கிழமை (ஜூன் 14) தெரிவித்துள்ளது. அந்த நிலநடுக்கத்தில் 61 பேர் உயிரிழந்தனர்.
மின்டானாவின் தெற்குப் பகுதியில் இம்மாதம் 8ஆம் தேதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 40 பேரைக் காணவில்லை.
அந்த நிலநடுக்கத்தால் கடற்படுகையில் மறைவாக இருந்த பவளப்பாறைகள் வெளியே தெரிவதோடு கடல்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு நாள் கழித்து கடற்படுகை எழும்பியுள்ளதை உள்ளூர்வாசிகள் கண்டறிந்தனர். ஒருசில இடங்களில் கடற்கரையின் எல்லைகளும் கிட்டத்தட்ட 200 மீட்டருக்கு உள்வாங்கின.
சராங்கானி, டாவாவ் ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரைகள் உள்வாங்கியதில் நீரில் மூழ்கியிருந்த பகுதிகள் இப்போது தெரியவந்தது.
நீரில் இருந்த கடற்பாறைகளையும் கடல்புல் படுகைகளையும் வெளிப்படையாகக் காண முடிகிறது என்று சுற்றுப்புறத் துறை குறிப்பிட்டது.

