பாலாவ்: பிலிப்பீன்சுக்கு தென்கிழக்கில் உள்ள பாலாவ் தீவில் முக்குளிக்கச் சென்ற சிங்கப்பூரரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாதம் 7ஆம் தேதி முக்குளிக்கச் சென்றவரைத் தேடும் பணிகளில் பாலாவ் அதிகாரிகளுக்கும் காணாமற்போனவரின் குடும்பத்தினருக்கும் தேவையான உதவிகளைச் செய்துவருவதாக அமைச்சு புதன்கிழமை (செப்டம்பர் 9) சொன்னது.
“நிலைமையை அணுக்கமாகக் கண்காணிக்கிறோம்,” என்று அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.
ஏறக்குறைய 340 சிறுதீவுகளால் அமைந்த பாலாவ் தீவு, தெளிந்த கடல்நீருக்கும் பவளப்பாறைகளுக்கும் பெயர் பெற்றது.
ஏறக்குறைய 18,000 பேர் வாழ்ந்துவரும் பாலாவ் தீவு, முக்குளிப்பு, மலையேற்றம், வனவிலங்குகளைப் பார்வையிடல் போன்ற நடவடிக்கைகளுக்கும் பிரபலமாக இருக்கிறது.
2024ஆம் ஆண்டிலிருந்து சைனா ஏர்லைன்ஸ் விமானங்கள் இடைவிடாமல் தைபெயிலிருந்து பாலாவ் தீவுக்குச் சேவை வழங்கிவருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் யுனைடட் ஏர்லைன்ஸ் தோக்கியோவிற்கும் பாலாவ் தீவுக்கும் இடையே இடைவிடா சேவையை வழங்கத் தொடங்கியது.
சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட முக்குளிப்பு நிறுவனங்கள் பயண நிறுவனங்களும் பாலாவ்விற்கான சுற்றுப்பயணத் தொகுப்புகளை வழங்குகின்றன.
பாலாவின் நிதியமைச்சின் அதிகாரபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதம் அந்தத் தீவுக்குக் கிட்டத்தட்ட 6,963 பேர் பயணம் மேற்கொண்டனர்.

