கோலாலம்பூர்: 2014ஆம் ஆண்டு காணாமற்போன மலேசியன் ஏர்லைன்சின் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணிகள் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படும் என்று மலேசியப் போக்குவரத்து அமைச்சு திங்கட்கிழமை (ஜூன் 29) தெரிவித்துள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கிச் சென்ற அந்த போயிங் 777 வகை விமானத்தில் பயணிகள் 227 பேரும் விமான ஊழியர்கள் 12 பேரும் இருந்தனர். அந்த விமானம் மாயமாய் மறைந்ததை அடுத்து இந்தியப் பெருங்கடலில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு தேடல் நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
‘ஓஷியன் இன்ஃபினிட்டி’ எனும் நிறுவனம் 2018ஆம் ஆண்டு வரை அந்த விமானத்தைத் தேடும் பணிகளில் ஈடுபட்டது. 2025ல் 15,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் தேடல் பணிகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் அது மலேசிய அரசாங்கத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தற்போது அந்த நடவடிக்கை மேலும் 12 மாதங்களுக்கு அதாவது 2027ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்களுக்கு உரிய தகவல் கிடைப்பது தொடர்பில் செயலாற்ற மலேசியா கொண்டிருக்கும் உறுதியான கடப்பாட்டை இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

