வாய்ப்புகளைக் கவ்வுங்கள்: மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் அன்வார்

2 mins read
a387e1cd-5b3e-4cab-8661-e4c29cdcf94f
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம். - கோப்புப் படம்: ஏஎஃப்பி

கோலாலம்பூர்: அதிகரித்துவரும் முதலீடுகளை, குறிப்பாக அதிநவீன தொழில்நுட்பத் துறையில் காணப்படும் முதலீடுகளை, உள்ளூர் நிறுவனங்கள் உபயோகித்துக்கொள்ளவேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ஊக்குவித்துள்ளார்.

பினாங்கின் பிராய் தொழில்துறை வட்டாரத்தில் (Prai Industrial Zone) அமைந்திருக்கும் சிஜி குளோபல் புரோஃபாஸ்டெக்ஸ் மேனியுஃபேக்சரிங் செண்டரியான் பெர்ஹாட் (CG Global Profastex Manufacturing Sdn Bhd) வெற்றிகரமாக உலகச் சந்தையில் நுழைந்திருப்பதை திரு அன்வார் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார் என்று மலாய் மெயில் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகச் சந்தைக்குள் வெற்றிகரமாக நுழைந்ததற்காக சிஜி குளோபல் நிறுவனம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் (நிறுவன ஊழியர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள்) நான் வாழ்த்து தெரிவித்து ஊக்கமளிக்கிறேன். அரசாங்கத்தின் ஆதரவுத் திட்டங்கள், அனுகூலங்கள் உள்ளிட்டவற்றினால் அது சாத்தியமானது,” என்று திரு அன்வார் எக்ஸ் சுமூக ஊடகத் தளத்தில் தெரிவித்தார்.

‘பூமிபுத்திரர்’ நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனமான சிஜி குளோபலை திரு அன்வார் சனிக்கிழமையன்று (டிசம்பர் 7) நேரில் சென்றுப் பார்வையிட்டார். சிஇஎம் (CEM) மின்சாரப் பொருள் உற்பத்திச் சேவைகளில் அந்நிறுவனம் மலேசியாவில் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மலேசியாவின் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ், ஆண் தொழிலதிபர்களைப் போல் பெண் தொழிலதிபர்களும் வளர்ச்சி காண்பதை உறுதிசெய்வதில் தமது அமைச்சு என்றும் கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார். திரு அன்வாருடன் சிஜி குளோபலுக்குச் சென்ற அவர், அந்நிறுவனம் உள்ளூர் மலாய் பெண்களுக்குச் சொந்தமானது என்றும் அது 2016ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

தொடங்கப்பட்டபோது சிஜி குளோபல் பினாங்கு, ஈப்போ வட்டாரங்களில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும்தான் சேவைகளை வழங்கி வந்தது என்று சொன்ன அவர், இப்போது அந்நிறுவனத்தின் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த வர்த்தகமும் ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்