வாஷிங்டன்: அரசாங்க அமைப்புகளும் வர்த்தகங்களும் தங்களுக்குள் ஆவணங்களைப் பகிரப் பயன்படுத்தும் ‘சர்வர்’ இயந்திர மென்பொருள் ஊடுருவப்படுவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு மேம்பாடுகளை (security updates) உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அந்நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த ஊடுருவலைப் பற்றித் தாங்கள் அறிவதாகவும் அரசாங்க, தனியார் பங்காளிகள் இரு தரப்பினருடனும் தாங்கள் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அமெரிக்க மத்தியப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. வேறு எந்தத் தகவலையும் அது அளிக்கவில்லை.
அமைப்புகள், நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் ‘ஷேர்பாயிண்ட்’ பயனாளர்கள்தான் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மைக்ரோசாஃப்ட் கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) வெளியிட்ட எச்சரிக்கைக் குறிப்பில் தெரிவித்தது. ‘மைக்ரோசாஃப்ட் 365’ல் உள்ள ‘ஷேர்பாயிண்ட் ஆன்லைன்’, ஊடுருவலால் பாதிக்கப்படவில்லை என்றும் மைக்ரோசாஃப்ட் அந்தக் குறிப்பில் சொன்னது.
இந்த ஊடுருவலைப் பற்றி முதலில் செய்தி வெளியிட்ட வாஷிங்டன் போஸ்ட் ஊடகம், அடையாளம் தெரியாத தரப்பினர் கடந்த சில நாள்களாக அமெரிக்க, அனைத்துலக அமைப்புகளையும் வர்த்தகங்களையும் குறிவைத்திருப்பதாகத் தெரிவித்தது. இதற்கு முன்பு அறியப்படாத பலவீனம் ஒன்றைச் சாதகமாக்கிக்கொண்டு இந்த ஊடுருவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.