பெய்ரூட்: லெபனானின் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 15) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் எழுவர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசாங்கத்துக்குச் சொந்தமான ஊடகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இருதரப்புக்கும் இடையே ஒப்பந்தங்கள் எட்டப்பட்ட பிறகு ஒரு தாக்குதலில் இத்தனை பேர் பலியானது இதுவே முதல்முறையாகும்.
சனிக்கிழமை காலை இஸ்ரேல் அதன் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியதாக என்என்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது. எதிரிகளின் போர் விமானங்கள் ஒரு வீடுமீதும் அன்சார் எனும் கிராமத்தின் புறநகர்ப் பகுதிகள்மீதும் நடத்திய தாக்குதல்களில் எழுவர் கொல்லப்பட்டதாகவும் மூவர் காயமுற்றதாகவும் என்என்ஏ குறிப்பிட்டது.
அலி-அல் டாஹெர் மலையையும் இஸ்ரேலிய போர் விமானங்கள் குறிவைத்ததாக என்என்ஏ தெரிவித்தது.
கடந்த மார்ச் மார்ச் மாதம் ஹிஸ்புல்லா அமைப்பு, லெபனானை மத்திய கிழக்குப் பூசலுக்குள் இழுத்தது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி ஹிஸ்புல்லா அவ்வாறு செய்தது.
அதற்குப் பதிலடியாக இஸ்ரேல் பெரிய அளவில் ஆகாயப் படைத் தாக்குதல்களை நடத்தியதோடு நிலத்தில் லெபனான்மீது படையெடுத்தது. அந்தத் தாக்குதல்களில் 4,300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக லெபனானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய கிழக்குப் பூசல் தொடர்பில் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதற்குப் பிறகு அமெரிக்க ஆதரவுடன் லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டது. அந்நிகழ்வுகளைத் தொடர்ந்து வன்முறைச் சம்பவங்கள் பெரிதும் குறைந்துள்ளன.
எனினும், இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருவதாக லெபனான் தெரிவித்துவருகிறது.


