பிரான்சில் வெப்ப அலைக்கு ஏழு பேர் உயிரிழப்பு

பிரான்சில் வெப்ப அலைக்கு ஏழு பேர் உயிரிழப்பு

2 mins read
aaef6691-5e05-4b3f-a234-8a46e6f9bee3
ஏற்கெனவே நாடு முழுவதும் சாதனை அளவிலான வெப்பநிலை, மே 26ஆம் தேதியன்று மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது. - படம்: ஏஎஃப்பி

பாரிஸ்: மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை வாட்டி வதைத்த அண்மைய கடும் வெப்ப அலை தொடர்பில் எழுவர் உயிரிழந்ததாகவும், அவர்களில் ஐவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் செவ்வாய்க்கிழமையன்று (மே 26) பிரெஞ்சு அரசாங்கம் தெரிவித்தது.

“வெப்பத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புடைய ஏழு மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை இன்று என்னால் கூற முடியும்,” என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் மாட் பிரெஜியன், டிஎஃப்1 தொலைக்காட்சி நிறுவனத்திடம் கூறினார்.

“நாம் தற்போது அனுபவித்துவரும் இந்த நிகழ்வு முடிவுக்கு வந்தவுடன், இறப்பு எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட காரணங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்,” என்றும் திருமதி பிரெஜியன் மேலும் கூறினார்.

நாடு முழுவதும் ஏற்கெனவே சாதனை அளவிலான வெப்பநிலையைப் பதிவு செய்துள்ள வெப்ப அலை, மே 26ஆம் தேதியன்று மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்பட்டது. இதன் காரணமாக, மேற்கு பிரான்சின் எட்டு மாநிலங்கள் மே மாதத்தில் முதல் முறையாக ஆரஞ்சு வெப்ப எச்சரிக்கையின்கீழ் வைக்கப்பட்டன.

தென்கிழக்கு லியோன் முதல் அட்லாண்டிக் கடற்கரை வரை, பிரான்சின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கும் சம்பவங்கள் நிகழ்ந்ததாக திருமதி பிரெஜியோனின் அலுவலகம் ஏஎஃப்பியிடம் தெரிவித்தது.

பல பகுதிகளில் ஜூலை மாதம் வரை உயிர்காப்பாளர்களின் கண்காணிப்பு தொடங்கப்படாத நிலையிலும் மே 25ஆம் தேதி நிலவிய அதிக வெப்பநிலை, பலரை நீரில் குளித்து குளிர்ச்சியடைய நாட்டின் கடற்கரைகளுக்குச் செல்லத் தூண்டியது.

“இன்று காலை கடற்கரை கண்காணிக்கப்படுகிறதா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம்,” என்று திரு தாமஸ் டுபுய், தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் தென்மேற்கு நகரமான ஆங்லெட்டில் உள்ள ஒரு கடற்கரைக்குச் சென்றபோது ஏஎஃப்பியிடம் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
வெப்ப அலைகடற்கரைஅலுவலகம்