கோலாலம்பூர்: மலேசியாவில் தற்போது நிலவிவரும் கடும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலையைக் கருத்தில்கொண்டு, பொதுமக்கள் எவரும் அதிகாரிகளின் அனுமதியின்றி திறந்தவெளியில் எரியூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என சரவாக் சுற்றுச்சூழல் துறை அறிவுறுத்தியுள்ளது.
திறந்தவெளி எரிப்பு என்பது விவசாயக் கழிவுகள், புதர்கள், காய்ந்த செடி கொடிகளை எரித்தல், வீட்டுக் கழிவுகள், கட்டுமானக் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துதல், சதுப்பு நிலங்கள் அல்லது குப்பைக் கிடங்குகளில் அதிகாரபூர்வ அனுமதியின்றி எரியூட்டுதல் ஆகியவை.
இந்த வறண்ட காலத்தில் குப்பைகளை எரிப்பது புகைமூட்டத்தை உருவாக்கிப் பின்வரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சரவாக் சுற்றுச்சூழல் துறை எச்சரித்துள்ளது.
காற்றில் கலக்கும் நுண்துகள்களால் ஆஸ்துமா, இருமல், மூச்சுக்குழாய் அழற்சி, இதய பாதிப்புகள் போன்றவை ஏற்படலாம். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு இது பெரும் ஆபத்தை விளைவிக்கும்.
காற்று மாசுபடுவதோடு, காடுகளின் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படும். மேலும், பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்து புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கும்.
2024ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சுற்றுச்சூழல் தரச் சட்டம், பிரிவு 29Aன் கீழ் திறந்தவெளி எரிப்பு என்பது ஒரு குற்றமாகும்.
குற்றம் புரிந்து குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 25,000 ரிங்கிட் முதல் 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் மற்றும் சிறை ஆகிய இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
நடவடிக்கையை நிறுத்தச் சொல்லியும் மீறினால், ஒவ்வொரு நாளும் 5,000 ரிங்கிட் கூடுதல் அபராதமாக வசூலிக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் யாரேனும் எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சரவாக் சுற்றுச்சூழல் துறையிடம் தகவல் தெரிவிக்கலாம்.

