ஈப்போ: பேராக் மாநிலத்தின் ஈப்போவில் உள்ள அஞ்சோங் பெர்சாம் பகுதியில் உள்ள ஏழு குடியிருப்புகளில் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) பகல் 3.40 மணியளவில் கடும் புயலுடன் பெருமழை பெய்தது.
அங்கு தாமான் உத்தாமா வட்டாரத்தில் இருந்த 240 வீடுகள் அதனால் சேதமடைந்தன. வீட்டின் கூரைகள் பெயர்ந்து வீசி எறியப்பட்டன, வாயிற் கதவுகள் உடைந்து மின்விநியோகம் தடைப்பட்டது.
கடந்த 30 ஆண்டுகளில் காணப்படாத அளவு இயற்கையின் சீற்றம் அமைந்தது என்று அங்குள்ள குடியிருப்பாளர்கள் கூறினர்.
அவ்வாறு கடும் புயலாலும் மழையாலும் பாதிக்கப்பட்டு மரங்கள் வீட்டின்மேல் விழுந்த நிலையில் லொக் சியு சின் என்ற 64 வயது மாது, வாயிற் கதவை இறுகப் பிடித்தபடி உதவிக்குத் தனிமையில் காத்திருந்தார்.
அருகில் வேலைக்குச் சென்றிருந்த அவரது மகள் வீட்டின் வெளியில் ஏற்பட்ட வெள்ளத்தாலும், போக்குவரத்து நெரிசலாலும் உடனடியாக வீடு திரும்ப முடியவில்லை.
லியு புய் இ என்ற அந்த மாதின் 46 வயது மகள், வீட்டை அடைந்ததும் வாசல் உட்பட பெரிய அளவில் சேதம் அவரது இல்லத்தில் ஏற்பட்டுவிட்டதைக் கண்டார். அவரால் முன் வாசலிலோ, பின் வாசல் வழியாகவோ வீட்டிற்குள் புக முடியவில்லை.
வீட்டின் பின்னால் இருந்த இடிபாடுகளையும் விழுந்த மரங்களையும் எப்படியோ அவர் கடந்து உள்ளே கதவைப் பிடித்தபடி நின்றுகொண்டிருந்தத் தாயை அடைந்தார்.
உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்ட நிலையிலும் தாயைக் காப்பாற்றுவதே ஒரே எண்ணமாகக் கொண்ட இரு பிள்ளைகளின் தாயான திருவாட்டி லியு அவரது முயற்சியை எளிதில் கைவிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
மிகவும் பயந்தநிலையில் நின்றிருந்தத் தாயைக் காப்பாற்றி மாற்று இடத்தில் தற்போது இருவரும் தங்கியிருப்பதாக லியு தெரிவித்தார். மின்சாரமும் தண்ணீர் வசதியுமின்றி சேதமடைந்த வீட்டில் இனி யாரும் குடியிருக்க முடியாது என்று அவர் கூறினார்.
அங்கிருந்த குடியிருப்பாளர்களில் ஒருவர் வீட்டுக்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய அதிக அளவில் பணம் தேவைப்படும், அதை யார் கொடுப்பார்கள் என்று கவலையுற்றார்.

