பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்செயல்கள் குறித்த புகார்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சென்ற ஆண்டு 26.5% அதிகரித்தது.
மலேசியப் புள்ளி விவரத் துறை அந்தத் தகவலை வெளியிட்டது.
சென்ற ஆண்டு, குழந்தைகள் சம்பந்தப்பட்ட 1,567 குற்றச்செயல்கள் பதிவானதாக தலைமைப் புள்ளியியல் வல்லுநர் உஸிர் மஹிடின் கூறினார். 2022ல் அது 1,239ஆக இருந்தது.
சமூகநலத் துறை தெரிவித்த தகவலின்படி, பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை சென்ற ஆண்டு 26.1% அதிகரித்து, 8,536ஆக இருந்ததாக திரு உஸிர் கூறினார். 2022ல் அது 6,770ஆகப் பதிவானது.
“சிறுவர்களை (3,118) காட்டிலும் சிறுமிகளுக்கு (5,418) அதிக பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்பட்டது,” என்றார் திரு உஸிர்.
“இருப்பினும், அதே காலகட்டத்தில் பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை சிறுமிகளைக் காட்டிலும் 26.4% கூடியது,” என்றும் அவர் தெரிவித்தார்.