மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் கூஜி கடற்கரையில் ஆளில்லா வானூர்திகளைப் பறக்கவிடுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நியூ சவுத் வேல்ஸ் மாநில மீட்புப் பணியாளர்கள், கடற்கரைக்கு அருகே சுறாக்களைக் கண்காணிப்பதால் புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டது.
அங்கு, ஜூன் 13ஆம் தேதி, சுறா தாக்கியதில் கடுமையாகக் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிட்னியின் கிழக்குப் பகுதியில் உள்ள கூஜி கடற்கரையில் 30 மீட்டர் சுறா ஒன்று 35 வயது பெண்ணைக் கடித்ததாக அவசரச் சேவைகளுக்கு உதவி கோரி அழைப்புவந்தது.
இடது காலின் கீழ்ப்பகுதியிலும் கையிலும் காயமடைந்த பெண், செயிண்ட் வின்சன்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், ஜூன் 14ஆம் தேதி அவரது உடல்நிலை தேறியதாக மருத்துவர்கள் கூறினர்.
சுறா தாக்குதலால் கூஜி கடற்கரையும் சிட்னி நகரின் ரான்ட்விக் மன்ற வட்டாரத்தில் உள்ள பிற கடற்கரைகளும் 24 மணிநேரத்திற்கு மூடப்பட்டன.
ஆளில்லா வானூர்திகள் மூலம் கடற்கரைகளுக்கு அருகில் உள்ள நீர்ப்பகுதியில் சுறாக்களின் நடமாட்டத்தைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலியக் கடற்கரைகளில் இவ்வாண்டு சுறாக்களின் தாக்குதல் சம்பவங்கள் தலைதூக்கியுள்ளன.

