டெஹ்ரான்: ஹோர்முஸ் நீரிணையில் கத்தாரின் திரவநிலை இயற்கை எரிவாயுக் கப்பல்மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
சிங்கப்பூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) பிற்பகல் நிலவரப்படி, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.3 விழுக்காடு அதிகரித்து, பீப்பாய்க்கு 72.94 அமெரிக்க டாலராகவும் வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட் எண்ணெய் 1.2 விழுக்காடு உயர்ந்து 69.38 அமெரிக்க டாலராகவும் ஏற்றம் கண்டன.
ஒமான் கடற்கரைக்கு அருகில் ஹோர்முஸ் நீரிணையைவிட்டு வெளியேறிய ‘அல் ரெகாயத்’ என்ற அந்தக் கப்பல்மீது ஆளில்லா வானூர்தி அல்லது ஏவுகணைமூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இத்தாக்குதல் காரணமாகக் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டபோதிலும், ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் எட்டப்பட்ட தற்காலிக அமைதி உடன்பாட்டைச் சோதிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. இது, பாரசீக வளைகுடாப் பகுதியில் கடல்வழிப் போக்குவரத்துப் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கி உள்ளதால் கப்பல் நிறுவனங்கள் பெருங்கவலை அடைந்துள்ளன.

