வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வளாகத்தில் சனிக்கிழமை (மே 23) திடீர் என துப்பாக்கிச் சூடு நடத்திய ஆடவரை அந்நாட்டின் ரகசியப் படையினர் சுட்டுக்கொன்றனர்.
அதிகாரிகளுக்கும் துப்பாக்கிக்காரனுக்கும் இடையே நடந்த போராட்டத்தில், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்தார்.
சம்பவம் நடந்தபோது அதிபர் டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்தார். அவர் ஈரான் அமைதி ஒப்பந்தத்தின் தொடர்பில் உள்ளே பணிபுரிந்துகொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு வெளியே நடந்துள்ளது.
அதிபருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை ரகசியப் படை தொடர்புப் பிரிவின் தலைவர் ஆண்டனி குக்லியல்மி உறுதிசெய்தார்.
சம்பவ நாளன்று, மாலை 6 மணியளவில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பு வட்டாரத்துக்குள் சென்ற அந்த ஆடவர், அவரது பையிலிருந்து துப்பாக்கி ஒன்றை எடுத்து திடீரெனச் சுடத் தொடங்கியதும் அங்கிருந்த அதிகாரிகள் அவரை உடனடியாகத் திருப்பித் தாக்கினர்.
பாதுகாப்பு அதிகாரிகளுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் அமெரிக்க ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
20 முதல் 25 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்டதாகவும் உடனே அங்கிருந்தோர் அலறியடித்துக்கொண்டு அங்கும் இங்குமாக ஓடியதாகவும் அங்கிருந்த சுற்றுப்பயணிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிக்காரன் குறித்தும் காயமடைந்த பொதுமக்களில் ஒருவர் பற்றியும் விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுடப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட துப்பாக்கிக்காரன் மரணமடைந்துவிட்டதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.

