ஐடாஹோ: அமெரிக்காவின் ஐடஹோ மாநிலத்தில் உள்ள வர்த்தக வட்டாரத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) மதியம் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிக்காரன் உட்பட மூவர் மரணமடைந்ததாக அம்மாநிலக் காவல்துறை தெரிவித்தது.
அந்தச் சிறிய மாநிலத்தின் மொத்த மக்கள்தொகை 47,400 ஆகும். அங்குள்ள கடைத்தொகுதிகள் நிறைந்த ‘டுவின் ஃபால்ஸ்’ என்ற பகுதியில் புகழ்பெற்ற உணவகம் அருகில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு துப்பாக்கிச்சூடு குறித்த தகவல் கிடைத்ததாக நகரின் தகவல் ஒருங்கிணைப்பாளர் ஜோஸ் பால்மர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டுவின் ஃபால்ஸ் காவல்துறைத் தலைவர் மெத்தியு ஹிக்ஸ், சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்தில் துப்பாக்கிக்காரன் மரணமடைந்துவிட்டதாகவும் சமூகத்துக்கு ஏற்பட்ட மிரட்டல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் ஊடகத்திடம் தெரிவித்தார்.
மொத்த மரண எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாது என்ற காவல்துறைத் தலைவர், மூவர் மரணமடைந்ததையும் இருவர் காயமடைந்ததையும் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
துப்பாக்கிக்காரனை அடையாளம் காணவும் அவனது செயலுக்காண காரணங்களை அறியவும் காவல்துறை விசாரணை தொடர்வதாகத் திரு மெத்தியு கூறினார்.
அப்பகுதியில் உள்ள சாலைகளும் ஒரு பாலமும் சம்பவத்துக்குப் பிறகு மூடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தெரிவித்தது.

