வொரோ: நைஜீரியாவில் வொரோ எனும் கிராமத்தில், கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 170 பேர் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி மூன்றாம் தேதி நடத்தப்பட்ட இத்தாக்குதலுடன், அக்கிராமத்தில் உள்ள வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகின.
வொரோ உட்பட இரு கிராமங்களுக்குள் துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நுழைந்து அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாகச் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
தாக்குதலில் இருந்து பொதுமக்களைக் காப்பாற்ற முயன்ற பாதுகாவலர்களும் இச்சம்பவத்தில் பலியாகினர்.
நைஜீரியாவில் கொள்ளையர்களும் பயங்கரவாதக் குழுக்களும் அடிக்கடி வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதால், அந்நாட்டில் பதற்றமான சூல்நிலை உருவாகியுள்ளது.
இதனால் பொதுமக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், நைஜீரிய மக்களுக்கும், அரசாங்கத்திற்கும் தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்றும் கூறினார்.
“பயங்கரவாதம் மற்றும் வன்முறை தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் நைஜீரிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒற்றுமையை பொதுச் செயலாளர் மீண்டும் வலியுறுத்துகிறார். மேலும் குற்றவாளிகளை நீதிக்கு முன் நிறுத்துவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

