வத்திகன்: போரினால் ஏற்படும் துயரங்களை முன்னிலைப்படுத்துமாறு செய்தியாளர்களைப் போப்பாண்டவர் லியோ திங்கட்கிழமை (மார்ச் 16) கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், மோதல்கள் குறித்து அதிகம் பேசுவதன் மூலமும் அதிகாரத்தில் இருப்பவர்களின் குரலாக ஒலிப்பதன் மூலமும் செய்திகள் வெறும் பிரசாரமாக மாறிவிடும் அபாயம் குறித்து அவர் எச்சரித்துள்ளார்.
இத்தாலியின் டிஜி2 தொலைக்காட்சி செய்தி நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
“போரின் உண்மையான கோர முகத்தைக் காட்டுங்கள். அதை ஒரு காணொளி விளையாட்டு போன்று சித்தரிக்காமல், பாதிக்கப்பட்டவர்களின் கண்களின் வழியாக அதன் வலியை உலகிற்குச் சொல்லுங்கள்,” என செய்தியாளர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
“தற்போது நிலவும் போர் சூழலில், செய்திகள் பிரசாரமாக மாறும் அபாயத்திலிருந்து அவற்றை நாம் பாதுகாத்திட வேண்டும்,” என போப் ஆண்டவர் லியோ கூறினார்.
ஈரான் மீது அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அழைப்புகளை அவர் அண்மை காலமாகத் தீவிரப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

