கோலாலம்பூர்: சிங்கப்பூரின் எஸ்ஐஏ விமான நிறுவனமும் மலேசியாவின் சுற்றுலாத் துறையும் (டுரிசம் மலேசியா) ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இருதரப்பு சுற்றுலாவை மேம்படுத்துவதும் மலேசியா-சிங்கப்பூர் இடையே விமான இணைப்புகளை வலுப்படுத்துவதும் உடன்பாட்டின் முக்கிய நோக்கமாகும்.
இதன் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (மே 26) அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆசிய-பசிபிக் வட்டாரத்தில் விரிவான இணைப்புகளைக் கொண்டுள்ள எஸ்ஐஏவின் கட்டமைப்பு வழியாக விமான இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் மலேசியாவை ஒரு விருப்பமான பயண இடமாக நிலைநிறுத்துவதற்கும் ஒப்பந்தம் வகை செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
புதிய ஒத்துழைப்பு, சிங்கப்பூர் வழியாக வட்டார மையங்களுடன் இணைப்புகளை வலுப்படுத்தி, மலேசிய விமானப் போக்குவரத்து, சுற்றுலாத் துறை மீட்சிக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டுரிசம் மலேசியாவின் இயக்குநர் முஹமட் அமிருல் ரிஸால் அப்துல் ரஹிம், “இவ்வாண்டிலும் அதற்கு அப்பாலும் ‘மலேசியாவுக்கு வாருங்கள்’ என்ற இயக்கத்தை மலேசியா தீவிரப்படுத்தி வரும் இவ்வேளையில் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது,” என்றார்.
இதற்கிடையே எஸ்ஐஏயின் தென்கிழக்கு ஆசியாவுக்கான வட்டார உதவித் தலைவர் லியோனார்ட் அருள், மலேசிய பயணத்துறை வளர்ச்சிக்கும் உலகளாவிய இணைப்புகளுக்கும் எஸ்ஐஏயின் வலுவான கடப்பாட்டை ஒத்துழைப்பு பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார்.

