அடுத்த ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணத்தின் சவூதி அரேபியாவின் ஹஜ், உம்ரா அமைச்சு சிங்கப்பூருக்கு 900 இடங்களை ஒதுக்கியுள்ளது.
இந்தப் பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர், அங்குள்ள விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதுடன் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.
2025, 2026 ஆகிய ஆண்டுகளில் குடியரசிற்கு வழங்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான இடங்களே இம்முறையும் வழங்கப்பட்டுள்ளன.
ஹஜ் பயணங்கள் அடுத்து 2027 மே 14 முதல் மே 19 வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம், தனது ‘மைஹாஜ்’ இணைய முகப்பு மூலம் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இடங்கள் ஒதுக்கப்படும் எனத் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
2014 மார்ச் 7க்கு முன் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 14 முதல் இணைய முகப்பு வழியே விருப்பக் கடிதம் (Letter of intent) அனுப்பப்படும்.
ஹஜ் விசா வழங்கப்படுவதற்கு முன், விண்ணப்பதாரர்கள் கட்டாய கூடுதல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்பட்டு, நாள்பட்ட நோய்கள் ஏதும் இல்லை எனச் சான்றளிக்கப்பட வேண்டும் என சவூதித் தரப்பு அறிவித்துள்ளதாக முயிஸ் குறிப்பிட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள சேவை வழங்கும் நிறுவனங்களை முயிஸ் நியமித்துள்ளது. இதில் மருத்துவப் பரிசோதனை, ரத்தப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, எலக்ட்ரோகார்டியோகிராம், நகர்வுத் திறன் பரிசோதனை ஆகியவை அடங்கும்.
“சிக்கலான மருத்துவ நிலைமைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்கள், அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட ஹஜ் மருத்துவக் குழுவின் கூடுதல் பரிசோதனைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்,” என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 13க்குள் தங்கள் சொந்தச் செலவில் பரிசோதனையை முடிக்க வேண்டும். மேலும் முன் கூட்டியே பதிவு செய்ய அவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். நியமிக்கப்பட்ட மருத்துவ சேவை நிறுவனங்கள் மற்றும் பதிவு ஏற்பாடுகள் குறித்த விவரங்களை MUIS வலைத்தளமான go.gov.sg/haj2027 என்ற இணையத்தளத்தில் பெறலாம்.


