ஜார்ஜ் டவுன், பினாங்கு: மலேசியாவின் பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த ஜார்ஜ் டவுன் நகரில், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) திடீரென்று தோன்றிய புதைகுழியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொம்தார் வளாகத்துக்கு அருகே 1.5 மீட்டர் அகலமும் 2.5 மீட்டர் ஆழமும் கொண்ட புதைகுழி ஏற்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் புதைகுழி ஏற்பட்டதாகவும் நிலத்தடி சாக்கடை நீர்க்குழாயில் ஏற்பட்ட வெடிப்பு அதற்குக் காரணம் என்று கருதப்படுவதாகவும் கொம்தார் சட்டமன்ற உறுப்பினர் டே லாய் ஹெங் கூறினார்.
நீர்க்கசிவைச் சரிசெய்து சாலையில் பழுதுபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளும் பணி நடைபெறுவதாக அவர் குறிப்பிட்டார்.
போக்குவரத்து நிலவரத்தைச் சீராக்க அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார் அவர்.
பெரிதாகப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்று திரு டே கூறினார். அதிகாரிகள் விரைவாகச் செயல்பட்டு, பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் நேரவில்லை என்றார் அவர்.