பெஷாவர்: பாகிஸ்தானில் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் அறுவர் கொல்லப்பட்டனர்.
அந்தப் பொறியாளர்கள் இஸ்லாமாபாத்திலிருந்து கைபர் பக்துன்குவா மாநிலம், ‘டாசு’விலுள்ள அணைக் கட்டுமானப் பகுதியில் இருக்கும் தங்களது முகாமிற்குச் சென்றபோது இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.
தற்கொலைத் தாக்குதல்காரர் தனது வாகனத்தைச் சீனப் பொறியாளர்கள் சென்ற வாகனத்தின்மீது மோதி வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகக் கூறப்பட்டது.
“இத்தாக்குதலில் சீனர்கள் ஐவரும் அவர்கள் சென்ற வாகனத்தை ஓட்டிய பாகிஸ்தானியரும் கொல்லப்பட்டனர்,” என்று வட்டாரக் காவல்துறை அதிகாரி முகம்மது அலி கந்தபூர் தெரிவித்தார்.
‘டாசு’ அணைக் கட்டுமானப் பகுதியில் கடந்த காலத்திலும் இத்தகைய தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் சீனர்கள் ஒன்பது பேர் உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர்.
இவ்விரு தாக்குதல்களுக்கு எவரும் பொறுப்பேற்கவில்லை.