ஜோகூர் பாரு: ஆள்கடத்தல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள அறுவர் ஜோகூர் நீதிமன்ற விசாரணையில் அவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்களை மறுத்துள்ளனர்.
குற்றஞ்சாட்டப்பட்ட அறுவரும் ஒரு சிங்கப்பூர் ஆடவரைப் பிணைப் பணத்துக்காகக் ஜோகூருக்குக் கடத்தியதோடு ஒரு சிங்கப்பூர் பெண்ணை ரகசியமாக அங்கு தடுத்துவைத்த குற்றங்களை எதிர்நோக்குகின்றனர்.
ஒரு பெண் உட்பட குற்றச்சாட்டுகளை மறுத்த அறுவரும் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 21) மேல் முறையீட்டுக்கு விண்ணப்பித்தனர்.
46 வயதான எம்.பாலமுருகன், 40 வயதான கே.சரவணன், 38 வயதான ஜி. புகநேஸ்வரன், 38 வயதான எஸ்.கோபிநாத், 41 வயதான எட்வின் நிக்கலஸ் ஸேவியர், 41 வயதான பி.ஸ்ரீதேவி ஆகியோர் அந்தக் குற்றஞ்சாட்டப்பட்ட அறுவராவர்.
சிங்கப்பூர் ஆடவரைக் கடத்தி, பிணைத்தொகையாக $20,000 பெறுவதற்கு அறுவரும் ஒன்றாகச் செயல்பட்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
ஸ்கூடாய் பகுதியில் உள்ள ஜாலான் ஆர்கிட் 36, தாமான் ஸ்ரீ ஆர்கிட் என்ற முகவரியில் இயங்கும் தேவாலயம் ஒன்றின் வெளியே அந்த அறுவரும் ஆகஸ்ட் 8ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் அச்செயல்களைப் புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆள்கடத்தல் சட்டப் பிரிவு 3ன்கீழ் அவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பிரம்படியோடு தண்டனை விதிக்கச் சட்டம் அனுமதிக்கிறது.
பிணை வழங்கமுடியாத வகையில் குற்றம் மிகக் கடுமையானதால் குற்றம் சுமத்தப்பட்டோருக்குப் பிணை வழங்கவேண்டாம் என்று அரசாங்கத் துணை வழக்கறிஞர் ஆர். நெவினா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார்.
இருப்பினும், ஸ்ரீதேவியைப் பிரதிநிதித்து வாதாடிய வழக்கறிஞர் கே.வீரநேஷ் அந்த மாது ஒற்றைப் பெற்றோர் எனவும் ஒரு வயதுக் குழந்தை உட்பட அவருக்கு ஆறு பிள்ளைகள் உள்ளதால் குறைந்த தொகையுடன் பிணைக் கோரிக்கை விடுத்தார்.
குற்றஞ்சாட்டப்பட்ட எஞ்சிய ஐவருக்கும் ஆறு மாதம் முதல் 22 வயது வரையிலான பிள்ளைகள் உள்ளதால் அவர்களும் பிணைக் கோரிக்கையை முன்வைத்தனர். அவர்களுக்கு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை.
குற்றம் சுமத்தப்பட்ட ஒவ்வொருவருக்கும் S$15,700 (50,000 ரிங்கிட்) பிணைத்தொகையை நீதிபதி நிர்ணயித்தார்.


