பெய்ரூட்: இரண்டு தென் லெபனானிய கிராமங்களின்மீது நடத்தப்பட்ட இஸ்ரேலியத் தாக்குதல்களில் அறுவர் கொல்லப்பட்டதாகவும் ஐவர் காயமடைந்திருப்பதாகவும் லெபனானிய சுகாதார அமைச்சு டிசம்பர் 7ஆம் தேதி தெரிவித்தது.
சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்து இரண்டு வாரங்கள்கூட ஆகாத நிலையில், சவால்மிக்க ஒரு சூழலாக இந்த அண்மைய நிலவரம் அமைந்துள்ளது.
பெய்ட் லிஃப் கிராமம் மீதான தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும் டெர் செர்யானில் ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் ஒருவர் மாண்டதாகவும் அறிக்கை ஒன்றில் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
இச்சம்பவங்கள் குறித்து இஸ்ரேலிய ராணுவம் இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
சண்டை நிறுத்தம் நடப்புக்கு வந்த பின்பும் பதற்றநிலை தொடர்கிறது.
சண்டை நிறுத்தத்திற்கு எதிராகச் செயல்படுவதாக இஸ்ரேலும் லெபனானின் ஹிஸ்புல்லாவும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
ஹிஸ்புல்லாவுடன் செய்துகொண்ட போர்நிறுத்த உடன்பாடு சரிந்தால் மீண்டும் போரைத் தொடங்கிவிடுவோம் என்று இவ்வார முற்பாதியில் இஸ்ரேல் மிரட்டல் விடுத்தது.
போர்நிறுத்த உடன்பாட்டுக்கு எதிராக நடவடிக்கைகள் இயங்கக்கூடும் என்று தாம் எதிர்பார்த்ததாக அமெரிக்கா முன்னதாகக் கூறியது. இருப்பினும், சண்டை நிறுத்தம் தொடர்வதாக அது தெரிவித்தது.