பெய்ரூட்: ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவராக இருந்த ஹசான் நஸ்ரல்லாவின் உடல் பிப்ரவரி 23ஆம் தேதியன்று அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ஹிஸ்புல்லா அமைப்பின் தற்போதைய தலைவர் நயீம் காசிம் பிப்ரவரி 2ஆம் தேதியன்று வெளியிட்டார்.
கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்பு, காஸா போர் உச்சத்தில் இருந்தபோது லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்புப் பேட்டை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது,
இதில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் தேதியன்று நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
அவர் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமைச் செயலாளராக 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பிரம்மாண்டமான இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அதில் பேரளவிலான பொதுமக்கள் ஊர்வலமாகச் செல்வர் என்றும் காசிம் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.
அதன்படி, தென்லெபனானிலிருந்து வெளியேற இஸ்ரேலிய ராணுவத்துக்கும் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் 60 நாள் அவகாசம் வழங்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கால அவகாசம் பிப்ரவரி 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
லெபனானின் சில பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போர் நிறுத்த உடன்படிக்கையை ஹிஸ்புல்லா மீறியிருப்பதாக அது குற்றம் சாட்டியது.