அளவுக்கு மீறினால்தான் மது போதையாகவும் நஞ்சாகவும் மாறும் என்றும் அளவுடன் அருந்தினால் அது அருமருந்து என்றும் பலரும் நம்பி வந்தனர். அதை உறுதிப்படுத்தும் ஆய்வுகளும் வெளியிடப்பட்டன. ஆனால் அதற்கு மாறாக, கொஞ்சம் மது அருந்தினாலும் ஆயுளுக்கு ஆபத்து என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
மது அருந்தினால் இதயநோய், நீரிழிவு நோய் போன்றவற்றைத் தடுக்கலாம் என்றும் அது சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும் என்றும் கூறும் பல ஆய்வுகள் இதுவரை வெளியிடப்பட்டு வந்துள்ளன. ஆண்கள் நாளொன்றுக்கு அதிகபட்சம் இரண்டு கோப்பை மதுவும் பெண்கள் ஒரு கோப்பை மதுவும் அருந்தலாம் என்று அமெரிக்க மருத்துவத் துறையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மதுவால் உடல்நலத்துக்கு நன்மை என்ற ஆய்வுகளில் உண்மையில்லை என்று புதிய ஆய்வொன்று கூறியுள்ளது. ஜாமா ஓபன் நெட் வொர்க் மருத்துவ ஆய்விதழில் மார்ச் 31ஆம் தேதி அந்த ஆய்வு வெளியிடப்பட்டது.
மது அருந்துதலின் தொடர்பில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக, கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் பேரிடம் நடத்தப்பட்ட 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளில் கிடைத்த தரவுகளை ஆய்வாளர்கள் ஆராய்ந்தனர்.
மது தொடர்பான முந்தைய பல ஆய்வுகள் நடத்தப்பட்ட விதத்தில் தவறுகள் இருந்ததாகவும் அதனால் அவற்றில் கிடைத்த தரவுகளிலும் தவறுகள் இருந்ததாகவும் புதிய ஆய்வில் தெரிய வந்தது.
மது அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது மிதமான அளவு மது அருந்தியவர்களுக்கு மரண அபாயம் குறைவதில்லை என்று ஆய்வு கூறியது.
மாறாக, மிதமான அளவு மது அருந்தும்போது எல்லா காரணங்களாலும் மரணம் உண்டாகும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும் ஆய்வில் தெரிய வந்தது.
பெண்கள் தினமும் 25 கிராம் மது அருந்தி வந்தால் அவர்களுக்கு மரணம் ஏற்படும் சாத்தியம் கணிசமாய் அதிகரிப்பதாக ஆய்வு தெரிவித்தது. 25 கிராம் மது என்பது, 150 மில்லிலிட்டர் அளவுள்ள இரண்டு கோப்பை திராட்சை மது, 360 மில்லிலிட்டர் அளவுள்ள இரண்டு கோப்பை பீர், அல்லது இரண்டு கோப்பை காக்டெயில் மது பானத்துக்குச் சமமாகும்.
தினமும் 45 கிராம் மது அருந்தும் ஆண்களுக்கு மரணம் ஏற்படும் சாத்தியம் இரு மடங்கு கூடியது.
மது அருந்துவதா வேண்டாமா என்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் என்று ஆய்வுக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரும் கனடாவின் விக்டோரியா பல்கலைக்கழக உளவியல் பேராசிரியருமான டிம் ஸ்டாக்வெல் கூறினார். ஆனால் தினமும் ஒரு கோப்பை மதுபானம் அருந்தும் ஒருவர் தமது ஆயுளில் ஐந்து நிமிடத்தைக் குறைத்துக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார். மது அளவு கூடக்கூட ஆயுட்காலமும் குறைந்துகொண்டே போகும் என்றார் அவர்.
உலக சுகாதார நிறுவனமும் கனடா போதைப் புழக்க சிகிச்சை நிலையமும் மது அருந்தாமல் இருப்பதே உடல்நலத்துக்குப் பாதுகாப்பு என்று இவ்வாண்டு தொடக்கத்தில் பரிந்துரைத்திருந்தன.