பாரிஸ்: 2027 ஜனவரி முதல், 15 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதைத் தடை செய்யும் சட்டத்துக்கு பிரெஞ்சு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
அதன் மூலம் இளையர்களுக்கு சமூக ஊடகக் கட்டுப்பாடு விதிக்கும் முதல் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.
புதிய சட்டத்தின்படி, பிரான்சில் உள்ள ஒவ்வொருவரும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தங்களது வயதைச் சரிபார்த்துக்கொள்வது கட்டாயமாகிவிடும்.
குழந்தைகளின் மனநலம் தொடர்பாக எழுந்துள்ள கவலைகளைக் கவனித்து வரும் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் கட்டுப்பாடுகளைப் பரிசீலித்து வரும் வேளையில் பிரான்ஸ் முந்திக்கொண்டு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
நாடாளுமன்ற ஒப்புதலை பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் வரவேற்றுள்ளார். தமது பத்தாண்டு பதவிக் காலத்தில் அப்படி ஒரு நடவடிக்கைக்கு அவர் ஏற்கெனவே உறுதியளித்திருந்தார்.
புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து சந்தேகங்கள் எழும்பியுள்ள நிலையில், வயதைச் சரிபார்க்க இணையத்திலுள்ள தொழில்நுட்பக் கருவிகள் பயனுள்ளவை, பாதுகாப்பானவை என்று அரசு தெரிவித்துள்ளது.
இடதுசாரிகளின் குறைகூறல்களுக்கு இடையே பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இளையருக்கான சமூக ஊடகத்தடைக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) ஒப்புதல் வழங்கின.
புதிய தடைச் சட்டம் பிரான்சில் இரு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்.
15 வயதுக்கு உட்பட்டவர்கள் செப்டம்பர் மாதம் முதல் புதிதாகச் சமூக ஊடகக் கணக்குகளைத் திறக்க முடியாது. புதிதாகக் கணக்குத் தொடங்கும் ஒவ்வொருவரின் வயதும் சரிபார்க்கப்படும்.
இரண்டாம் கட்டமாக, 2027 ஜனவரி மாதம் நடப்பில் இருக்கும் எல்லா சமூக ஊடகக் கணக்குகளுக்கும் வயது வரம்பு கட்டாயமாக்கப்பட்டு, 15 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் அதனை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படும்.
ஆஸ்திரேலியா கடந்த ஆண்டு இறுதியில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகத் தடையை அமல்படுத்தியது.

