கென்டக்கி: அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் உள்ள வட்டாரப் பள்ளியொன்றுக்கு உலகின் மிகப் பெரிய சமூக ஊடக நிறுவனங்கள் மொத்தமாக S$34.48 பில்லியன் (US$27 பில்லியன்) நிதியை இழப்பீடாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளன.
சமூக ஊடகங்களின் பயன்பாட்டால், மாணவர்கள் அவற்றின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு, சுகாதார பிரச்சினைக்கு ஆளாகி, அவர்களின் மனநிலை பாதிப்புக்கு உள்ளானதாகக் குற்றஞ்சாட்டி நீதிமன்றத்தில் அந்தப் பள்ளி வழக்குத் தொடுத்தது.
ஒருவித போதைபோன்ற தன்மையை ஏற்படுத்தும் அச்செயலிகளால் பள்ளியின் வளங்கள் வீண்போனதாகவும் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
‘இன்ஸ்டகிராம்’, ‘ஃபேஸ்புக்’ போன்றவற்றை நிர்வகிக்கும் ‘மெட்டா’ நிறுவனம் S$11.4 மில்லியன் நிதி வழங்க ஒப்புதல் தந்ததாக கென்டக்கி மாநிலத்தின் சட்ட ஆவணங்கள் பதிவு செய்தன.
‘டிக்டாக்’, ‘ஸ்னாப்’ நிறுவனங்கள் தரப்புக்கு $10.22 மில்லியன் நிதியையும் ‘கூகல்’ நிறுவனத்தின் ‘யூடியூப்’ நிர்வாகம் $2.55 மில்லியன் தொகையையும் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ள விவரம் ஆவணங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
கூகல் நிறுவனம் இழப்பீட்டுத் தொகையுடன் பள்ளி ஆசிரியர்களுக்கெனச் சிறப்புக் கல்வித் திட்டங்களையும் வட்டார அளவில் ஏற்றுநடத்துவதாகத் தெரிவித்துள்ளது.
இழப்பீட்டை அறிவித்ததோடு சமூக ஊடகங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடமுடியாது. ஏனெனில், அமெரிக்காவின் பல வட்டாரங்களில் இயங்கும் கல்வி நிலையங்கள் இதேபோன்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளன. அந்த வழக்குகள் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளன.

