தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சராக சவுத் டக்கோட்டா ஆளுநர் தேர்வு

2 mins read
0bee57fe-3a6d-4b63-be46-ff3524ceb816
திருவாட்டி கிரிஸ்டி நொஎம் குடிநுழைவு குறித்த டிரம்ப்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார். - படம்: ராய்ட்டர்ஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள டோனல்ட் டிரம்ப், அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையை வழிநடத்த சவுத் டக்கோட்டாவின் ஆளுநர் கிரிஸ்டி நொஎம்மைத் தேர்வுசெய்துள்ளதாக ‘சிஎன்என்’ தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் வரும் ஜனவரி 20ஆம் தேதி அதிகாரபூர்வமாகப் பதவியேற்கும்போது, திரு டாம் ஹொமன், திரு ஸ்டீஃபன் மில்லர் ஆகியோருடன் திருவாட்டி நொஎம்மும் டிரம்ப் நிர்வாகத்தில் இணைந்துகொள்வார் என்று ‘சிஎன்என்’ கூறியது.

திரு ஹோமன், திரு மில்லர் போல அல்லாமல், திருவாட்டி நொஎம்மின் பதவிக்கு செனட்டின் உறுதிப்பாடு தேவைப்படுகிறது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு நிறுவப்பட்டது.

இணையப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பயங்கரவாத மிரட்டல்களை விசாரிப்பது, இயற்கைப் பேரிடர்கள் தொடர்பான நடவடிக்கைகள், சுங்கத்துறைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை அது கையாள்கிறது.

அத்துறை ரகசியச் சேவைப் பிரிவையும் நிர்வகிக்கிறது.

இந்நிலையில், திருவாட்டி நொஎம், 52 ,குடிநுழைவு தொடர்பான டிரம்பின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆவணமில்லாத குடியேறிகளை பெரிய அளவில் திருப்பி அனுப்பப்போவதாக டிரம்ப் கொடுத்த உறுதியும் அவற்றில் அடங்கும்.

அமெரிக்காவிலிருந்து மில்லியன்கணக்கான குடியேறிகளை வெளியேற்றும் முயற்சிகளுக்குப் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

சீனா, கியூபா, நிகாராகுவா போன்ற சில நாடுகள் குடியேறிகளைக் கொண்ட விமானங்களை வரவேற்க எப்போழுதும் ஒப்புதல் அளிப்பதில்லை.

முதல் தவணையில், டிரம்ப் முன்னேற்றம் கண்டபோதும், பெரிய அளவில் குடியேறிகளை வெளியேற்றும் திட்டத்தை அவர் நிறைவேற்றத் தவறினார்.

அவரது முதல் தவணையில், திரும்ப அனுப்பப்பட்ட குடியேறிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 360,000ஐத் தாண்டியதில்லை.

முன்னைய அதிபர் பராக் ஒபாமாவின் நிர்வாகத்தில் காணப்பட்ட எண்ணிக்கையை விட அது குறைவு என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்