சோல்: தென்கொரியாவில் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் பதிவான 34 மரணங்கள், வெப்பம் தொடர்பானவையாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒன்பது மரணங்களைவிட அது நான்கு மடங்கு அதிகம்.
தென்கொரியா இதுவரை இல்லாத வகையில் மூன்றாவது முறை, ஆக வெப்பமான கோடைக்காலத்தை எதிர்கொண்டுள்ளது.
2023ஆம் ஆண்டு வெப்பம் தொடர்பான வருடாந்தர மரண எண்ணிக்கை 32க்கு அதிகரித்ததாகக் கொரிய நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு அமைப்பு குறிப்பிட்டது.
2024ஆம் ஆண்டில் 34க்கு உயர்ந்த மரண எண்ணிக்கை, கடந்த ஆண்டு 29க்குக் குறைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் வெப்பம் தொடர்பாக 138 மரணங்கள் பதிவாகின.
கடுமையான கோடைக்கால வெப்பத்துடன் அதிகரிக்கும் மரண எண்ணிக்கைகள் ஒத்துப்போவதாகக் கூறப்படுகிறது.
1973ஆம் ஆண்டு நாடளாவிய வானிலைப் பதிவுகள் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் நிலவிய கோடைக்காலங்களே ஆக வெப்பமானவை என்று கொரிய வானிலை ஆய்வகம் குறிப்பிட்டது.
இவ்வாண்டு ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம்வரை சராசரி வெப்பநிலை 25.4 டிகிரி செல்சியசாகப் பதிவானது.
1991ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பதிவான சராசரி வெப்பநிலையைவிட அது 1.7 டிகிரி அதிகம்.
2024ஆம் ஆண்டிலும் கடந்த ஆண்டிலும் வெப்பநிலை அதிகரித்திருந்தது. அப்போது பதிவான சராசரி வெப்பநிலை 25.7 டிகிரி செல்சியசுக்கும் 25.6 டிகிரி செல்சியசுக்கும் இடைப்பட்டிருந்தது.
வெப்பம் தொடர்பாக உயிரிழந்தோரில் பெரும்பாலோர் மூத்தோர்.
2022ஆம் ஆண்டிலிருந்து பதிவாகிவந்த 138 மரணங்களில் கிட்டத்தட்ட 101 மரணங்கள் அதாவது 73.2 விழுக்காட்டு மரணங்கள் 60 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோரிடையே ஏற்பட்டவை.
இவ்வாண்டு பதிவான 34 மரணங்களில் 16 அல்லது 47.1 விழுக்காட்டு மரணங்கள் 80 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்தோரிடையே ஏற்பட்டவை.
சோலிலும் வடக்கு ஜியோல்லா மாநிலத்திலும் ஆக அதிகமான மரண எண்ணிக்கைகள் பதிவாகின.


