லாஸ் ஏஞ்சலிஸ்: ‘ஸ்பேஸ்எக்ஸ்’ ஏவுகணை ஒன்று, டிசம்பர் 1ஆம் தேதியன்று தென்கொரியாவின் முதல் ராணுவ உளவுத் துணைக்கோளை விண்ணில் பாய்ச்சியது.
கடந்த வாரம் பியோங்யாங் அதன் முதல் ராணுவ உளவுத் துணைக்கோளைப் பாய்ச்சியதைத் தொடர்ந்து, இந்த ஏவுகணை பாய்ச்சப்பட்டுள்ளது.
சோலின் துணைக்கோளை ஏந்திச்சென்ற எலோன் மஸ்கின் ‘ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கன் 9’ ஏவுகணை உள்ளூர் நேரப்படி காலை 10.19 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி, டிசம்பர் 2ஆம் தேதியன்று காலை 2.19 மணி) கலிஃபோர்னியாவில் உள்ள ‘வெண்டன்பெர்க்’ அமெரிக்க விண்வெளிப் படைத் தளத்திலிருந்து புறப்பட்டது.
அந்த ஏவுகணையில் ‘கொரியா’ என்ற சொல் காணப்பட்டது.
ஏவுகணை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையைச் சென்றடைந்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
சுற்றுப்பாதையைச் சென்றடைவது என்பது, அணுவாயுதங்களைக் கொண்ட வடகொரியாவைக் கண்காணிக்க தென்கொரியா உள்ளூரிலேயே அதன் முதல் உளவுத் துணைக்கோளைக் கொண்டிருப்பதாகப் பொருள்படும்.
சோல் 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக நான்கு உளவுத் துணைக்கோள்களைப் பாய்ச்சத் திட்டமிட்டுள்ளது. வடகொரியாமீது அதன் உளவுப் பணிகளை வலுப்படுத்துவதே அதன் நோக்கம்.
பூமிக்குமேல் 400இலிருந்து 600 கிலோமீட்டர் வரை சென்றடைய இலக்கு கொண்டுள்ள சோலின் துணைக்கோளம், 30 சென்டிமீட்டர் அளவிலான பொருளைக் கூட கண்டுபிடிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதாக யொன்ஹாப் செய்தி நிறுவனம் கூறியது.
“நுணுக்கம், புவி கூர்நோக்கு ஆற்றல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உலகளவில் நமது துணைக்கோளத் தொழில்நுட்பம் முதல் ஐந்து நிலைகளில் இருக்கிறது,” என்று தென்கொரியத் தற்காப்பு அமைச்சின் அதிகாரி கூறியதாக அச்செய்தி நிறுவனம் தெரிவித்தது.