சோல்: தென்கொரியாவின் எதிர்த்தரப்பு ஜனநாயகக் கட்சித் தலைவர் லீ ஜே-மயுங், ஜனவரி 2ஆம் தேதி தெற்குத் துறைமுக நகரமான பூசானுக்குச் சென்றபோது கத்திக்குத்துக்கு ஆளானார்.
ஹெலிகாப்டர் மூலம் சோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட திரு லீ, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் அடுத்த மூன்று மாதங்களில் தென்கொரியாவில் நடைபெறவுள்ள தேர்தலில் களம்காணும் அந்நாட்டு அரசியல் தலைவர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரு லீயின் கழுத்துப் பகுதியில் உள்ள பெரிய நரம்பு ஒன்று பாதிக்கப்பட்டிருந்ததால், மருத்துவர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்து அதைச் சரிசெய்ததாக கூறப்பட்டது.
தலைவர் லீ ஜே-மயுங்கிற்கு எதிரான இந்தப் பயங்கரவாதச் செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் சம்பவம் எனவும் ஜனநாயகக் கட்சியின் தலைமைக் குழுக் கூட்டத்தில் ஹாங் இக்-பியோ கூறினார்.
இந்தக் கத்திக்குத்துச் சம்பவத்தை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் உயர்மட்ட அரசியல் தலைவர்களுக்குப் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
துப்பாக்கி வைத்திருக்க கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் வரலாற்றில் அரசியல் வன்முறை கொண்ட அந்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.