சோல்: தென்கொரியா, காணாமற்போன அதன் கடலோடி ஒருவரின் உடலைத் திங்கட்கிழமை (ஜூலை 13) அதிகாலை மீட்டுள்ளது. அந்நாட்டுக் கடற்படை அந்தத் தகவலை வெளியிட்டது.
வடகொரியாவுடனான கடற்புற எல்லைப் பகுதிக்கு அருகில் வார இறுதியில் சென்றிருந்த கடலோடியைக் காணவில்லை என்று இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தென்கொரியாவின் கிழக்குக் கடலோரப் பகுதிக்கு அப்பால் சுற்றுக்காவல் படகில் அவர் சென்றிருந்தார். பின்னர் அந்நாட்டுக் கடற்படை தேடுதல், மீட்புப் பணிகளைத் தொடங்கியது. கடலோரத்திலிருந்து கிட்டத்தட்ட 52 கிலோமீட்டர் கிழக்கே அவரைக் கண்டுபிடித்ததாகக் கடற்படை கூறியது.
அவர் காணாமற்போனது பற்றிய மேல்விவரங்களை அது வெளியிடவில்லை.
கடற்பகுதியில் வட எல்லைக்கோட்டைத் தாண்டியிருந்தால் அவரை ஒப்படைப்பதில் உதவுமாறு வடகொரியாவைத் தென்கொரியா கேட்டிருந்தது.
1950ஆம் ஆண்டு முதல் 1953 வரை நீடித்த கொரியப் போருக்குப் பிறகு இரு கொரியாக்களுக்கும் இடையில் கடல், நில எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

