தென்கொரியா, அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி: ஆகஸ்ட் 18 தொடக்கம்

1 mins read
d5357902-4936-4fa5-ac4a-ceeca3397979
தென் கொரியாவும் அமெரிக்காவும் 11 நாள் கூட்டு ராணுவப் பயிற்சியில் ஈடுபடும். - படம்: ராய்ட்டர்ஸ்

தென்கொரியாவும் அமெரிக்காவும் பெரிய அளவில் இம்மாதம் (ஆகஸ்ட் 2025) 18ஆம் தேதி கூட்டு ராணுவப் பயிற்சிகளை நடத்தவிருக்கின்றன.

வடகொரியாவுடன் பதற்றம் ஏற்படுத்தும் பயிற்சிக் கூறுகளை அவை இவ்வாண்டின் பிற்பகுதிக்குத் தள்ளிவைக்கவிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

“உல்ச்சி ஃப்ரீடம் ‌ஷீல்ட்” என்று வழங்கப்படும் வருடாந்தரப் பயிற்சிகள் 11 நாள்களுக்கு நீடிக்கும். பயிற்சிகள் சென்ற ஆண்டைப் போலவே இருக்கும். ஆயினும் 40 நேரடிப் பயிற்சிக் கூறுகளில் 20, அடுத்த மாதம் (செப்டம்பர்) கொண்டுசெல்லப்படும். தென்கொரிய ராணுவப் பேச்சாளர் லீ சுங் ஜுன் அதனைத் தெரிவித்தார்.

வடகொரியாவிடமிருந்து வரும் கூடுதல் மிரட்டல்களையும் நவீனப் போர்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களையும் சமாளிக்கும் உத்திகள் கூட்டுப் பயிற்சிகளில் சோதித்துப் பார்க்கப்படும் என்றார் திரு லீ.

வடகொரியா ஏவுகணையைப் பாய்ச்சினால் அதை எதிர்கொள்ளும் முறையும் பயிற்சியில் சோதிக்கப்படும்.

தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் பியோங்யாங்குடன் கசப்படைந்துள்ள உறவை மேம்படுத்த எண்ணுகிறார். வட கொரியாவுடன் முட்டுப்பட்டுள்ள பேச்சை மீண்டும் தொடங்கவும் திட்டமிடுகிறார் திரு. லீ.

வடகொரியாவுடன் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவே சில பயிற்சிக் கூறுகள் ஒத்திப்போடப்படுவதாகத் தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் சொன்னார்.

ஆனால் தென்கொரிய-அமெரிக்கக் கூட்டுப் பயிற்சிகளைத் தள்ளிப்போடுவதில் வடகொரியாவுக்கு விருப்பம் இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மாறாகப் பயிற்சிகளை முழுமையாக நிறுத்தவே பியோங்யாங் விரும்பும் என்கின்றனர் அவர்கள்.

குறிப்புச் சொற்கள்