சோல்: உலகிலேயே மிகக் குறைவான குழந்தைகள் பிறக்கும் நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று.
மக்கள்தொகை மிகவும் அபாயமான அளவில் குறைந்துவரும் வேளையில் அதன் அரசாங்கம் பல பில்லியன் செலவிட்டு பலவிதத் திட்டங்களை முன்னெடுத்து, மக்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவித்து வருகிறது.
நிலைமையை சரிசெய்து மக்கள் தொகையைச் சீராக்க மேலும் பல ஆண்டுகள் ஆக நேர்ந்தாலும் கடந்த 2023ஆம் ஆண்டுமுதல் அதன் குழந்தைப் பிறப்பு விகிதம் சற்று ஆறுதல் தரும் வகையில் அமைந்து வருகிறது.
அதன் அடிப்படைக் காரணங்கள் குறித்து ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் பிறப்பு விகிதம் கூடியதை அந்நாடே வரவேற்றுள்ளது.
இளையர்கள் திருமணங்களைத் தவிர்ப்பதற்கும் அவ்வாறு திருமணம் செய்தாலும் குழந்தை பெறுவதை தம்பதிகள் தள்ளிவைப்பதற்கும் விலைவாசி முக்கியக் காரணமாகத் தென்கொரியாவில் கூறப்படுகிறது.
இவ்வாண்டின் தென்கொரிய குழந்தைப் பிறப்பு விகிதம்
இவ்வாண்டு பிப்ரவரி மாதம் மட்டும் ஏறத்தாழ 23,000 குழந்தைகள் அங்கு பிறந்துள்ளன. ஏழு ஆண்டுகளில் அதே மாதத்தில் பிறந்த குழந்தைகள் விகிதத்தில் இதுவே ஆக அதிகமாகும் என்று தென்கொரியாவின் புள்ளி விவரங்கள் அமைச்சு தகவல் வெளியிட்டது.
ஆண்டு அடிப்படையில் 13.6 விழுக்காடு குழந்தை பிறப்பு விகிதம் ஏற்றம் அடைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
தென்கொரியாவில் பிறப்பு குறித்துத் தரவுகள் 1981 முதல் பதிவு செய்யப்பட்டதில் ஆக அதிக குழந்தைகள் பிறந்தது பிப்ரவரி மாதமாக அமைந்தது. 2022ஆம் ஆண்டு மத்தியில் இருந்து திருமணங்களும் அதிகமாகப் பதிவாயின எனவும் அறிவிக்கப்பட்டது.


