சோல்: வடகொரியாவின் கிழக்கு நகரான வோன்சனுடன் இணைக்கக்கூடிய ரயில் திட்டத்தைத் தென்கொரியா மீண்டும் தொடங்கவிருப்பதாக அந்நாட்டு ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
வடகொரியாவுடனான உறவு கசந்ததை அடுத்து தென்கொரியாவின் அந்தத் திட்டம் பல ஆண்டுகளாகத் தேங்கி நின்றது.
வடகொரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள ராணுவமற்ற மண்டலத்திற்கு அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள கியோங்வோன் ரயில் பாதையை சீரமைக்கும் பணிகளை அரசாங்கம் மீண்டும் தொடங்கும் என்றார் தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சுங் டோங்-யங்.
2015ஆம் ஆண்டு தொடங்கிய அந்தத் திட்டம், அதற்கு அடுத்த ஆண்டே நிறுத்தப்பட்டது.
சோலில் தொடங்கும் அந்த ரயில் பாதை, வடகொரியாவின் கிழக்குக் கரை பகுதியில் உள்ள வோன்சன் என்ற முக்கிய நகருடன் இணைப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று அமைச்சு அறிக்கை வெளியிட்டது.
ராணுவமற்ற மண்டலத்தில் அமைதியை வலுப்படுத்துவதுடன் இயற்கை சுற்றுலாத் தலங்களைச் சென்றடைவதை ரயில் திட்டம் எளிமையாக்கும் என்று ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டது.
சுமுகமான உறவுக்கான தனது கோரிக்கைகளைத் தொடர்ந்து நிராகரித்துவரும் வடகொரியாவிடமிருந்து எந்தவித பதிலும் வராத நிலையில், பேச்சுவார்த்தையைத் தொடர்வதில் உள்ள சிரமங்களை தென்கொரிய அதிபர் லீ ஜே மியுங் ஒப்புக்கொண்டார்.


