சோல்: பாலியல் குற்றத்தில் சந்தேகப் பேர்வழியாகக் கருதப்படுபவர் 80 வயதைத் தாண்டியவர் என்பதால் அவரைக் கைதுசெய்ய தென்கொரியக் காவல்துறை மறுத்துவிட்டது.
அவர் வயதானவர் என்பதும் தப்பியோட வாய்ப்பில்லை என்பதுமே அதற்குக் காவல்துறை கூறும் காரணங்கள்.
இவ்வாண்டு ஜூன் 2ஆம் தேதி அம்முதியவர் 80களில் உள்ள ஒரு மூதாட்டியை நோன்சானில் உள்ள அவரது வீட்டில் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதனைக் கண்ட அம்மூதாட்டியின் மகன், அம்முதியவரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
சந்தேகப் பேர்வழி பிடிபட்டபோதும், அவரிடம் விசாரித்தபின் காவல்துறை அவரை வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
அவரது வயதைக் கருத்தில்கொண்டும் அவரது தங்குமிடம் தெரியும் என்பதாலும், அவர் தப்பியோடக்கூடிய அபாயமில்லை எனக் கருதி, காவல்துறை அவரை விடுவித்துவிட்டது.
அந்த ஆடவர்மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு சுமத்தும்படி வழக்கறிஞர் தரப்பைக் காவல்துறை கேட்டுக்கொண்டது. மீண்டும் அம்மூதாட்டியை நெருங்கக்கூடாது என்று எச்சரித்ததே தவிர, அவர்மீது வேறு நடவடிக்கை எதையும் காவல்துறை எடுக்கவில்லை.
“என் தாயார் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டார். ஆனால், அந்த ஆடவரோ சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்,” என்று அம்மூதாட்டியின் மகன் கூறினார்.