தென்கொரிய அதிபர் தேர்தல்: கடுமையான கொள்கைவாதியைத் தேர்ந்தெடுத்த பழைமைவாதிகள்

தென்கொரிய அதிபர் தேர்தல்: கடுமையான கொள்கைவாதியைத் தேர்ந்தெடுத்த பழைமைவாதிகள்

படம்: ராய்ட்டர்ஸ்

03 May 2025 - 10:35 pm

1 mins read

சோல்: தென்கொரியாவின் பழைமைவாத மக்கள் சக்திக் கட்சி (conservative People Power Party), முன்னாள் ஊழியரணி அமைச்சர் கிம் மூன் சூவைத் தங்கள் அதிபர் தேர்தல் வேட்பாளராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி தென்கொரிய அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னைய அதிபர் யூன் சுக் இயோல், ராணுவ ஆட்சி சட்டத்தை அமல்படுத்த முயன்றதைத் தொடர்ந்து தன்மீது அரசியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பதவி விலக நேரிட்டது. அதனையடுத்து அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறவுள்ளது.

திரு கிம், லிபரல் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான லீ ஜே மியுங்கை எதிர்த்துப் போட்டியிடுவார். திரு லீ, வாக்கெடுப்புகளில் ஒவ்வொரு பழைமைவாதக் கட்சி வேட்பாளரையும்விட கணிசமான அளவு கூடுதல் வாக்குகளைப் பெற்றவர்.

திரு கிம், 73, பல்கலைக்கழக மாணவராக இருந்த காலத்தில் ஊழியரணி ஆர்வலராக இருந்தார். பிறகு அவர், கடுமையான கொள்கைகளைக் கொண்ட (hardline) பழைமைவாதியாக உருவெடுத்தார். திரு யூனின் அரசாங்கத்தில் திரு கிம் ஊழியரணி அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

அதிபர் தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், வர்த்தகங்களுக்கு உகந்த சட்டங்களை அமல்படுத்தப்போவதாக திரு கிம் உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
உலகம்தென்கொரியாஅதிபர்