பேங்காக்: வெள்ளிக்கிழமை (ஜனவரி 24) அன்று உலகில் மிக மோசமாக காற்று மாசடைந்திருந்த முதல் ஐந்து நகரங்களில் ஹோ சி மின் இரண்டாவது இடத்திலும் நோம் பென், பேங்காக் நகர்கள் நான்காவது, ஐந்தாவது இடங்களிலும் உள்ளன.
காற்றுத் தூய்மை தரக் கண்காணிப்பு அமைப்பான ‘இக்ஏர்’ (IQAir) அமைப்பின்படி தாய்லாந்து தலைநகரில் அடர்த்தியான புகைமூட்டம் காணப்பட்டது. வெளிப்புறத்தில் பெரும்பாலான நேரத்தைச் செலவிடும் ஊழியர்கள் அவதிப்பட்டனர்.
பயிர் செய்கை தொடர்பான எரிப்பு, தொழில்துறை மாசு, கடுமையான போக்குவரத்து ஆகியவற்றினால் காற்று மாசடைகிறது.
தூய்மைக்கேட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, அரசாங்கம் ஒரு வாரத்துக்கு பொதுப் போக்குவரத்தை இலவசமாக்கியுள்ளதாக அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் சூரிய ஜுவாங்ரூங்குருவாங்கிட் கூறினார்.
பேங்காக்கில் கிட்டத்தட்ட 300 பள்ளிகள் இந்த வாரம் மூடப்பட்டதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார் பயன்பாட்டைக் குறைக்க நிறுவனங்களும் அரசாங்க அமைப்புகளும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கட்டுமானத் தளங்கள் தூசி மறைப்புகளைப் பயன்படுத்தவேண்டும் என்றும் தாய்லாந்து பிரதமர் பீடோங்டர்ன் ஷினாவத்ரா சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.
வியட்னாமின் மிகப்பெரிய நகரமான ஹோ சி மின் நகரில், மூச்சுடன் உள்ளே செல்லக்கூடிய துகள்களின் அளவு உலக சுகாதார நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட 11 மடங்கு அதிகம் என்று அந்த அமைப்பு கூறியது.
சில வாரங்களுக்கு முன்பு, தலைநகர் ஹனோய் உலகில் மிகவும் மாசுபட்ட நகரமாக இருந்தது. காற்று மாசுபாட்டால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், முகக்கவசங்களை அணியுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
மாசுபாட்டைக் குறைக்க கரிம வரி, மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்ற நீண்டகாலத் தீர்வுகளை தென்கிழக்கு ஆசிய அரசாங்கங்கள் முன்னெடுத்து வருகின்றன.