ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஜகார்த்தா நகரம் அதன் 499வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளது. அதன் காரணமாக அந்த நகரத்தின் ஆளுநர் பிரமோனோ அனுங் பல சலுகைகளை அறிவித்துள்ளார்.
ஜூன் 22, 27, 28ஆம் தேதிகளில் நகரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அந்நாள்களில் பொதுப் போக்குவரத்திற்கான பயணச்சீட்டுகள் இலவசம். அதேபோல், சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுச்சீட்டும் இலவசம்.
இந்த இலவசச் சலுகை ஜகார்த்தா மக்களுக்கு மட்டும் அல்ல என்றும் அனைத்து இந்தோனீசியர்களும் இந்தச் சலுகைக்குத் தகுதியானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல தரப்புகளிடம் இருந்து கோரிக்கைகளும் கருத்துகளும் தமக்கு வந்ததால் இந்தச் சலுகையை அறிவித்ததாக நகரத்தின் ஆளுநர் பிரமோனோ அனுங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பொதுமக்கள் அன்கோல் டிரீம் லேண்ட் பூங்கா, ரங்குனான் விலங்கியல் தோட்டம் மற்றும் எட்டு நகர அருங்காட்சியகங்களை இலவசமாகப் பார்க்கலாம்.
ஜகார்த்தாவின் இலகு ரயில், பெரு விரைவு ரயில், நகரப் பேருந்து ஆகிய பொதுப் போக்குவரத்து கட்டமைப்புகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
“முதலில் இந்தச் சலுகைகள் ஜகார்த்தா மக்களுக்கு மட்டும்தான் என்று திட்டமிடப்பட்டது. பின்னர் அனைத்து இந்தோனீசியர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் இருக்க வேண்டும் என்று கருதி மாற்றப்பட்டது,” என்று ஆளுநர் பிரமோனோ அனுங் கூறினார்.

