புத்ராஜெயா: அண்மையில் அமெரிக்கா அறிவித்துள்ள வரி விதிப்பு குறித்து விவாதிக்க மலேசிய நாடாளுமன்றம் விரைவில் கூடவிருக்கிறது.
மே 5ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுவதை பிரதமர் அன்வர் இப்ராகிம் உறுதிப்படுத்தியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்றம் கூட்டப்படுவது உண்மையா என்ற கேட்டதற்கு ஆம், ஆம் என்று திரு அன்வார் பதிலளித்தார்.
இந்தச் சிறப்புக் கூட்டம், அரசாங்கமும் எதிர்க்கட்சி எம்பிக்களும் இவ்விவகாரத்தில் மலேசியாவின் நிலை குறித்து விவாதிக்க சிறந்தத் தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சின் சியு நாளிதழ், அமெரிக்கா அதன் நட்பு நாடுகள்மீது விதித்துள்ள வரி குறித்து விவாதிக்க திங்கட்கிழமை (மே 5) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறுவதாக தகவல் வெளியிட்டிருந்தது.
பிரதமர் அலுவலகம் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தற்போது பிரதமர் அன்வாரின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் அந்தத் தகவல் குறிப்பிட்டது.
இருந்தாலும், இது நாள் வரை எந்த எம்பிக்கும் அதிகாரபூர்வ கடிதம் வரவில்லை.