கொழும்பு: கொள்ளளவையும் தாண்டி அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளதால் இலங்கை சிறைச்சாலைகள் இட நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.
போதைப்பொருள் புழக்கம், நிழலுலகச் செயல்பாடுகளை முறியடிக்கும் நோக்கில் காவல்துறையினர் அண்மைக்காலமாக அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய சோதனைகளில் 10,000க்கும் மேற்பட்ட சந்தேகப் பேர்வழிகள் கைதுசெய்யப்பட்டிருப்பது சிறைச்சாலைகளில் இட நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது.
நாட்டிலுள்ள 30 சிறைச்சாலைகளில் கிட்டத்தட்ட 30,000 பேர் அடைக்கப்பட்டிருப்பதாகச் சிறைத்துறையின் அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கிட்டத்தட்ட 13,000 பேருக்கு மட்டுமே அவை போதுமானவை என்ற நிலையில் இரு மடங்கிற்கும் மேலானவர்கள் அங்கு அடைபட்டுள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விசாரணையை எதிர்நோக்கி இருப்பவர்கள் என்றும் சட்ட நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக அவர்கள் வெகுகாலமாக சிறையில் அடைபட்டுள்ளனர் என்றும் ‘டெய்லி மிரர்’ செய்தி தெரிவிக்கிறது.
போதைப்பொருள் வைத்திருந்தது போன்ற கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறையில் தள்ளப்படுவர் என்றும் சிறு சிறு குற்றங்களுக்காகப் பிடிபட்டவர்கள் காவல்துறைப் பிணையில் விடுவிக்கப்படலாம் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் கூறின.
இதனிடையே, குறுகிய காலத்திற்கு அடைக்கப்படும் சந்தேகப் பேர்வழிகளுக்காக சிறைச்சாலைகளுக்கு உள்ளேயே வேறு தற்காலிக இடங்களை அடையாளம் காண அதிகாரிகள் முயன்று வருவதாக சிறைத்துறைப் பேச்சாளர் காமினி திசநாயக தெரிவித்தார்.
அத்துடன், சிறைச்சாலைகளில் நெருக்கடியைக் குறைப்பதற்காக கைதிகள் சிறை முகாம்களுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.