கொழும்பு: கடனில் மூழ்கிய இந்தியப் பெருங்கடல் தேசத்தில் மார்க்சிஸ்ட் சார்புடைய அனுராகுமார திசாநாயக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவர்தன பதவி விலகியுள்ளார்.
பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக, கட்டவிழ்த்து விடப்பட்ட பரவலான எதிர்ப்புகளை எதிர்கொண்ட முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி, பின்னர் பதவி விலகினார். அதன் பின்னர் 75 வயதான குணவர்தன, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமராகப் பதவியேற்றார்.
ஞாயிற்றுக்கிழமை (செப். 21) நடந்த தேர்தலில், ராஜபக்சவின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக அதிபர் ரணில் விக்கிரமசிங்கவை திசாநாயக்க தோற்கடித்தார்.
விக்கிரமசிங்கவின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவிற்கு நன்றி தெரிவித்து, தனது எக்ஸ் தளப் பதிவில், “நான் இதன்மூலம் பிரதமர் பதவியிலிருந்து விலகுகிறேன் என்பதை நான் உங்களுக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று திரு குணவர்தன தெரிவித்தார்.
குணவர்தன தனது பதவி விலகல் கடிதத்தை அதிபராக தேர்வு செய்யப்பட்ட திஸாநாயக்கவிற்கு ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.