கொழும்பு: இலங்கையால் அதிகம் தேடப்பட்டு வந்தவர் இந்தோனீசியாவில் பிடிபட்டுவிட்டார் என்றும் அவர் நாடுகடத்தப்பட்டு குற்றம் சுமத்தப்படும் என்றும் இலங்கை அதிகாரிகள் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) தெரிவித்தனர்.
பல்வேறு கொலைகளிலும் திட்டமிட்ட போதைப்பொருள் குற்றச் செயல்களிலும் தொடர்புடைய இலங்கையர் அறுவரை இந்தோனீசியக் காவல்துறை கைதுசெய்திருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் ரவி சேனவிரத்னே கூறினார்.
“வெளிநாட்டில் இத்தனை பேர் பிடிபட்டிருப்பது இதுவே முதன்முறை,” என்று அவர் சொன்னதாக ‘ஏஎஃப்பி’ செய்தி வெளியிட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டோரில் பெண் ஒருவரும் அடங்குவார்.
கூட்டுநடவடிக்கை மூலம் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்றும் இந்தியப் புலனாய்வுத் துறைக்கும் அதில் பங்குண்டு என்றும் இலங்கைக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
அந்த அறுவருமே தேடப்பட்டு வருபவர்கள் என அனைத்துலகக் காவல்துறையால் (இன்டர்போல்) சிவப்பு அறிக்கை விடப்பட்டவர்கள்.
கைதுசெய்யப்பட்டோரில் ஒருவர் கெலஹல்பதாரா பத்மே என்றழைக்கப்படும் மந்தினு பத்மஸ்ரீ பெரேரா. அவர், கொழும்பு நீதிமன்றத்தில் தன் எதிரியைச் சுட்டுக்கொன்றவர் எனக் கூறப்படுகிறது.
இவ்வாண்டில் மட்டும் கும்பல் சார்ந்த 80 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 42 பேர் கொல்லப்பட்டதாகக் காவல்துறைத் தரவுகள் காட்டுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
சென்ற ஆண்டு இலங்கை அதிபராகப் பதவியேற்ற அனுர குமார திசாநாயக்க ஊழலையும் குற்றக் கும்பல்களையும் ஒழிப்பேன் எனச் சூளுரைத்தார். அதனைத் தொடர்ந்து, குற்றக் கும்பல்களின் தலைவர்கள் நாட்டைவிட்டுத் தப்பியோடியதாகத் திரு வீரசூரிய தெரிவித்தார்.