கொழும்பு: சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக, பயன்பாட்டில் இல்லாத ஒரு மருத்துவமனைக் கட்டடத்தைச் சிறைச்சாலையாக மாற்ற இலங்கை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை நீதி அமைச்சு புதன்கிழமை (ஜூலை 8) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அண்மையில், இலங்கையில் நெரிசல் மிகுந்த சிறைச்சாலை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 20 கைதிகளும் 8 காவலர்களும் கொல்லப்பட்டனர். அத்தகைய சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கத் தற்போது இலங்கை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.
அண்மைய சம்பவம், இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக இருந்து வரும் நெரிசல் நிலைமை குறித்த தீவிரக் கண்காணிப்பை அதிகரித்துள்ளது.
புள்ளிவிவரங்களின்படி, இலங்கை சிறைச்சாலை உண்மையான கொள்ளளவை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகமான கைதிகளுடன் இயங்கி வருவது தெரியவந்துள்ளது.
நெருக்கடியான சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை வேறு இடத்திற்கு மாற்ற, தீவின் தெற்குப் பகுதியில் பயன்பாட்டில் இல்லாத ஒரு மருத்துவமனையின் ஒரு பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உத்தரவிட்டுள்ளார்.

