கொழும்பு: குறைந்த வயதுப் பெண்ணைப் பாலியல் கொடுமை செய்ததாக மூத்த பௌத்த பிக்கு ஒருவரை இலங்கைக் காவல்துறை சனிக்கிழமை (மே 9) கைது செய்துள்ளது.
71 வயதான பல்லேகம ஹேமரத்ன எனும் அவர், தலைநகர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சென்றபோது அதிகாரிகளிடம் பிடிபட்டார் என்று காவல்துறை கூறியது.
கடந்த 2022ஆம் ஆண்டு 11 வயதுச் சிறுமியிடம் அவர் தகாதமுறையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பிலான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கைது நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.
கொழும்பு நகருக்கு வடக்கே சுமார் 200 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அனுராதபுரத்தில் மிகவும் புகழ்பெற்ற பௌத்த ஆலயத்தில் அந்தக் குற்றச்செயல் நிகழ்ந்ததாகக் கூறப்பட்டது. அந்த ஆலயத்தின் தலைமை சமயகுருவாக ஹேமரத்ன உள்ளார்.
அவர் விரைவில் நீதிபதி முன்பு நிறுத்தப்படுவார் என்று காவல்துறை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
பாலியல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயாரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பௌத்த பிக்குகள் வெளிநாடு செல்ல அனுராதபுரம் நீதிமன்றம் ஒன்று தடை விதித்த மறுநாள் ஹேமரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த குருமார்கள் சிறுமியரை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளபோதிலும் அந்தக் குற்றச்செயலுக்காக ஆக மூத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை என ஏஎஃப்பி செய்தி கூறியது.

