வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் செயற்கை நுண்ணறிவுக் கொள்கைக்கான ஆலோசகர் ஸ்ரீராம் கிருஷ்ணன் தமது பதவியிலிருந்து விலகிகியுள்ளார்.
அமெரிக்காவின் தொழில்நுட்ப ஆதிக்கத்தை உறுதிசெய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட வெள்ளை மாளிகையின் செயற்கை நுண்ணறிவுச் செயல் திட்டத்தில் இவர் முக்கியப் பங்காற்றினார்.
அதிபர் டிரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் செயற்கை நுண்ணறிவுக் கொள்கை வடிவமைப்பில் உதவ, ‘ஆண்ட்ரிசென் ஹொரோவிட்ஸ்’ நிறுவனத்தின் முன்னாள் பங்காளியான ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.
அண்மையில் கூகல், மைக்ரோசாஃப்ட், எக்ஸ்ஏஐ ஆகிய முன்னணி நிறுவனங்கள் அவற்றின் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு முன்பாக, அதன் பாதுகாப்புத் திறனை அரசு பரிசோதிப்பதற்கான ஆரம்பக்கட்ட அனுமதியை வழங்க ஒப்புக்கொண்டன.
இந்த உடன்பாட்டை எட்டிய குழுவில் ஸ்ரீராம் கிருஷ்ணணும் முக்கிய உறுப்பினராக இருந்தார். பதவியிலிருந்து விலகினாலும், வெள்ளை மாளிகைக்கு வெளியிலிருந்து ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆலோசகராகத் தொடர்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் கிருஷ்ணனின் இந்த விலகல் முடிவு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அதிபர் டிரம்ப்பின் அரசாங்கம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில் வெளியாகியுள்ளது.

