மாஸ்கோ: ஊழியர் பற்றாக்குறையை எதிர்நோக்கும் ரஷ்யா, அதற்குத் தீர்வு காண இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளை நாடியுள்ளது. இவ்வளவு காலம் ஊழியர் பற்றாக்குறையைச் சமாளிக்க மத்திய ஆசியாவிலிருந்து அது ஊழியர்களைப் பணியமர்த்தியது.
மக்கள்தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், உக்ரேனுக்கு எதிரான போர் ஆகியவற்றால் ரஷ்யாவில் மிகக் கடுமையான ஊழியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே, ஆட்சேர்ப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்போர் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட சில நாடுகளில் ஊழியர்களைத் தேடி வருகின்றனர்.
அடுத்த பத்தாண்டுகளுக்குள் ரஷ்யாவுக்கு மேலும் 11 மில்லியன் ஊழியர்கள் தேவைப்படுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியத் தலைநகர் புதுடெல்லிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் பயணம் மேற்கொண்டபோது இந்த விவகாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.
தற்காலிக ஊழியர் பணியமர்த்தலுக்கான செயல்பாடுகளை எளிமைப்படுத்துவது குறித்து ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதற்கு முன்பே, ரஷ்யாவில் பணிசெய்ய இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட வேலை அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.
2021ஆம் ஆண்டில் ஏறத்தாழ 5,000 வேலை அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 56,000க்கும் அதிகமாக உயர்ந்தது.
வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்ட வேலை அனுமதி அட்டைகளின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் 240,000க்கும் அதிகமாக ஏற்றம் கண்டது.
இத்தகவலை ரஷ்யாவின் உள்துறை அமைச்சு வெளியிட்டது.
இவ்வாண்டு முதல் முக்கிய ரஷ்ய நகரங்களில் பனி அகற்றுதல் போன்ற நகராட்சிப் பணிகளில் இந்தியா மற்றும் மற்ற தெற்காசியா நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்பட்டு வருகின்றனர்.
ரஷ்யாவின் கட்டுமானத் துறை, உணவகங்கள் போன்றவற்றிலும் வெளிநாட்டு ஊழியர்கள் வேலையில் அமர்த்தப்படுகின்றனர்.

